திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்குப் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு பேருந்துகளும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலையுச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் நாளை, பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்குச் சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மேலும் மகா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. கோவில் வளாக கலையரங்கில், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்கள் ஒலித்தவாறு விழாக் களை கட்டியுள்ளது.