
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ளது வந்தவாசி கோட்டை. 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.
1756-ம் ஆண்டு தொடங்கிய மூன்றாம் கர்நாடகப் போர் நடந்து கொண்டிருக்கையிலேயே, வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லால்லி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் பலமாகக் கால் ஊன்றி ஆட்சி அரியணையில் அமர இந்த வந்தவாசிப் போர் தான் ஆங்கிலேயருக்கு உதவியதாக கூறப்படுகிறது.
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாகவும், இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது ஒரு சில பகுதிகள் தான். ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான குண்டுகள் இருக்கின்றன என்றும், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சுமார் 12 அடி நீளம் கொண்ட பீரங்கி ஒன்று இங்கு காணக் கிடைத்ததாகவும் அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். வந்தவாசி கோட்டை தெற்கே பேருந்து நிலையம் தொடங்கி, வடக்கே ஏரிக்கரை வரை ஒரு காலத்தில் கம்பீரமாக வீற்றிருந்த கோட்டை இன்று ஒரு ஒற்றைச்சுவர் மற்றும் ஒரு கண்காணிப்புக் கோபுரம் மட்டும் எஞ்சி பரிதாபமாகக் காட்சியளிக்கிறது.










































