
அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், படவேடு
கோயில்கள் நிறைந்த கிராமம் படவேடு என்றழைக்கப்படும் படைவீடு கிராமம். திருவண்ணாமலையிலிருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், வேலூரிலிருந்து 40 கி.மீ.தொலைவிலும் ஆரணியிலிருந்து 20 கி.மீ.தொலைவிலும் அமைந்துள்ளது. 10, 11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களின் கீழ் குறுநில மன்னராக ஆண்டுவந்த சம்புவராயர்கள் சோழ அரசு வீழ்ச்சிக்குப்பின் தனி அரசர்களாக அறிவித்து படைவீட்டில் சம்புவராயர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதி படைவீடு என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சம்புவராயர்களின் கோட்டை சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் சக்திதலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். கருவறையில் அம்மன் சுயம்பு ரூபமாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அருகில் கொண்டு உலகில் சக்தியே பிரதானம் என்பதை எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகின்றாள். பின்புறம் அம்மன் சுதை வடிவிலான திருமேனி உள்ளது. அதனருகில் ஆதிசங்கரரால் பிரதிட்டை செய்யப்பட்ட பாணலிங்கமும் ஐனாகர்ஷண சக்கமும் உள்ளது. ஜமத்கனி முனிவர் யாகஞ்செய்த இடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் ஆனீ மாதத்தில் வெட்டியெடுத்து வரப்படும் மணதான் இங்கு திருநீற்றுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் நெற்றியில் அணிந்து கொள்ளப் பிணிகள் அகலும், தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை. திருக்கோயில்கள் நிறைந்த இவ்வூரானது சுற்றிலும் மலைகள், தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு என பசுஞ்சோலைகள் சூழ்ந்து காணப்படுகிறது.கருவறை ரேணுகா தேவியின் தலை மட்டும் சுயம்புவாக உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் ரேணுகாதேவியை வணங்கிச் அருள் பெறுகின்றனர். இங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா விசேஷமானது.
சாலை வசதிகள் :
படவேடு நகரை பொறுத்த வரை சாலைகள் மாவட்ட சாலைகள் மூலமாகவும், கிராம சாலைகள் மூலமாகவும் இணைக்கப்படுகிறது.
1. மாவட்ட சாலை 751 - படவேடு - சந்தவாசல் - ஆரணி நெடுஞ்சாலை
2. மாவட்ட சாலை - படவேடு - காளசமுத்திரம் - கண்ணமங்கலம் நெடுஞ்சாலை
3. மாவட்ட சாலை - படவேடு - சந்தவாசல் - களம்பூர் நெடுஞ்சாலை
போக்குவரத்து வசதிகள் :
பேருந்து வசதிகளைப் பொறுத்த வரை ஆரணி பணிமனையின் மூலம் அதிக பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
• சென்னைக்கு (தடம் எண் - 202) ஆரணி, ஆற்காடு , பூந்தமல்லி வழியாக அதிகப்படியான சேவைகள் உள்ளது.
• ஆரணி நகருக்கு நகரப்பேருந்து மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
• அதுமட்டுமில்லாமல் சேத்துப்பட்டு , போளூர், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், செங்கம், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், ஆற்காடு, வாலாஜா, கண்ணமங்கலம், வேலூர் ஆகிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மூலம் சேவைகள் உள்ளது.
• ஆரணி சாலையில் சந்தவாசல் எனுமிடத்தில் கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்கிருந்து 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் உள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்து இங்கு நின்று செல்லும்.
































