
ஜவ்வாதுமலை
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். , 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
அமர்தி நீர்வீழ்ச்சி விலங்கியல் பூங்கா:
ஜம்னாமத்தூரில் இருந்து அமிர்திக்கு செல்லலாம். 32வது கி.மீட்டரில் உள்ளது அமிர்தி. இங்கு நீர் வீழ்ச்சியும், விலங்கியல் பூங்காவும் உள்ளது. நாம் சென்றிருந்த நேரம் வேலூர் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். வார நாட்களில் குடும்பத்துடன் பலர் வருகின்றனர் என்றனர் அங்கிருந்த ஊழியர்கள்.
இப்பகுதிகளில் இடம் வாங்குவது, விற்பது மலைவாசிகளுக்குள் மட்டுமே என்பதால் வெளிநபர்கள் யாரும் அங்கு வீடு, விடுதிகள் கட்ட முடிவதில்லை. அதனால் அது ஒரு சிறு கிராமமாக தான் ஜம்னாமத்தூர் உள்ளது. ஒரே ஒரு அரசினர் விடுதி உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. இரவு தங்க வேண்டும் என்றால் முன்கூட்டியே பதிவு செய்துவிட்டு சென்றால் சிறப்பு. இல்லையேல் திருவண்ணாமலை, வேலூர் பகுதிகளில் தங்கிவிட்டு செல்லலாம்.
சாதாரண சின்ன உணவு விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கு அசைவ உணவு அற்புதம். அசல் தேன் இங்கு கிடைக்கும்.


































